புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை
1. கோயில்
பண் - பஞ்சமம்
257
வாரணி நறுமலர் வண்டு கிண்டு
    பஞ்சமம் செண்பக மாலைமாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்
    வந்து வந்திலைநம்மை மயக்குமாலோ
சீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு
    தில்லையம்பலத்(து) எங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந்(து) அஞ்சல் என்பார்
    ஆவியின் பரம்என்றன் ஆதரவே.
1
258
ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
    அருவினை யேனைவிட்டு அம்மஅம்ம
பாவிவன் மனமிது பையவே போய்ப்
    பனிமதிச் சடையான் பாலதாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
    நெஞ்சமும் தஞ்சமி லாமையாலே
ஆவியின் வருத்தம் இதாரறிவார்
    அம்பலத்(து) அருள்நடம் ஆடுவானே.
2
259
அம்பலத் தருள்நடம் ஆடவேயும்
    யாதுகொல் விளைவதென்(று) அஞ்சிநெஞ்சம்
உம்பர்கள்வன்பழி யாளர்முன்னே
    ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்
வன்பல படையுடைய பூதஞ்சூழ
    வானவர் கணங்களை மாற்றியாங்கே
என்பெரும் பயலமை தீரும்வண்ணம்
    எழுந்தரு ளாய்எங்கள் வீதியூடே!
3
260
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே
    ஏதமில் முனிவரோ(டு) எழுந்தஞானக்
கொழுந்தது வாகிய கூத்தனேநின்
    குழையணி காதினில் மாத்திரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் முன்றும்
    செங்கனி வாயும்என் சிந்தைவெளவ
அழுந்தும்என் ஆருயிர்க்(கு) என்செய் கேனோ?
    அரும்புனல் அலமரும் சடையினானே!
4
261
அரும்புனல் அலமரும் சடையி னானை
    அமரர்கள் அடிபணிந்து அரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
    பேசவும் நையும் என் பேதை நெஞ்சில்
கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
    காரிகை யார்முன்(பு)என் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையி னாலே
    தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.
5
262
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத்
    தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லைய தாகிய எழில்கொள் சோதி
    என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்
பல்லையார் பகந்தலை யோ(டு) இடறிப்
    பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநடம் ஆடில் எங்கள்
    ஆருயிர் காவலிங்(கு) அரிது தானே.
6
263
ஆருயிர் காவலிங்(கு) அருமை யாலே
    அந்தணர் மதலைநின் அடிபணியக்
கூர்நுனை வேற்படைக்கூற்றம் சாயக்
    குரைகழல் பணிகொள மலைந்த தென்றால்
ஆரனி அமரர்கள் குறைவி லாதார்
    அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரேஎங்கள் தில்லை வாணா!
    சேயிழை யார்க்கினி வாழ்வரிதே.
7
264
சேயிழை யார்க்கினி வாழ்வரிது
    சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை என்றடைந்தேன்
    தனிமையை நினைகிலை சங்க ராவுன்
பாயிரம் புலியதள் இன்னுடையும்
    பையமேல் எடுத்தபொற் பாத மும்கண்(டு)
ஏயிவல் இழந்தது சங்கம் ஆவா
    எங்களை ஆளுடை ஈச னேயோ.
8
265
எங்களை ஆளுடை ஈசனையோ
    இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுகம் நோக்கி நோக்கிப்
    பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே
    திருச்சிற்றம் பலமுட னேபுகுந்து
அங்குன பணிபல செய்து நாளும்
    அருள்பெறின் அகலிடத் திருக்கலாமே.
9
266
அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்று
    அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடையாரின் மிக்கார்
    ஏத்துகின் றார் இன்னம் எங்கள்கூத்தை
மருள்படு மழலைமென் மொழிவுமையாள்
    கணவனை வல்வினை யாட்டி யேனான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
    ஆசையை அளவறுத் தார்இங் காரே?
10
267
ஆசையை அளவறுத் தார்இங் காரே?
    அம்பலத்(து) அருநடம் ஆடு வானை
வாசநன் மலரணி குழல்மடவார்
    வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்
மாசிலா மறைபல ஓது நாவன்
    வன்புரு டோத்தமன் கண்டு ரைத்த
வாசக மலர்கள் கொண் டேத்த வல்லார்
    மலைமகள் கணவனை அணைவர் தாமே.
11
திருச்சிற்றம்பலம்

புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை
2. கோயில்
பண் - பஞ்சமம்
268
வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ?
தேனல்வரி வண்டறையும் தில்லைசிற்றம்பலவர்
நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே.
1
269
ஆடிவரும் கார்அரவும் ஐம்மதியம் பைங்கொன்றை
சூடிவருமா கண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்
தேடியிமை யோர்பரவும் தில்லைசிற்றம் பலவர்
ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே.
2
270
ஒட்டா வகைஅவுணர் முப்பரங்கள் ஓர்அம்பால்
பட்டாங்(கு) அழல்விழுங்க எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறையோவாத் தில்லைசிற்றம் பலவர்
கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே.
3
271
ஆரே இவைபடுவார் ஐயங் கொளவந்து
போரேடி என்று புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத் தில்லைசிற் றம்பலவர்
தீராநோய் செய்வாரை ஓக்கின்றார் காணீரே.
4
272
காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத் தில்லைசிற் றம்பலவர்
பூணார் வனமுலைமெல் பூஅம்பால் காமவேன்
ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே.
5
273
ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியம் சூடிய தில்லைச் சிற்றம் பலவர்
வாயினைக் கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே.
6
274
ஆவா! இவர்தம் திருவடிகொண்டு அந்தகன்தன்
மூவா உடலழியக் கொன்றுகந்த முக்கண்ணர்
தேவா மறைபயிலும் தில்லைச்சிற்றம் பலவர்
கோவா இனவளைகள் கொள்வாரோ என்னையே.
7
275
என்னை வலிவாரார் என்ற இலங்கையர் கோன்
மன்னும் முடிகள் நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித் தில்லைச் சிற்றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார் இம் முத்தரே.
8
276
முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற்றம் பலவர்
கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே.
9
277
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்று
மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்
சேக்காத லித்தேறும் தில்லைச்சிற்றம்பலவர்
ஊர்க்கேவந்(து) என்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்!
10
278
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் தன்னைப் புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங்கு இனிதா இருப்பாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com